அகிலத்திரட்டு அம்மானை 4441 - 4470 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 4441 - 4470 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

பிரம்ம ரிஷிகள்

வழியிலோ ரற்புதந்தான் மாயவனார் கண்டுமிகக்
களிகூர்ந் தவருடனே கட்டாக ஏதுரைப்பார்
மாமுனியே தேவர்களோ வழியி லொழுங்கொழுங்காய்
ஓமுனியே நின்றதையும் உரைப்பீர்கா ணென்றுரைத்தார்
அப்போது மாமுனியில் அருண முனிவனொன்று
செப்போடு வொத்த திருமாலை யும்பணிந்து
மாயவரே நான்முகனும் வாழும் பிரம்மமதில்
ஆய கலையிருஷி ஐம்பத் தொருநான்கோர்
பிரமன் பிறப்பைப் புகுந்தெடுத் திவ்விருஷி
வரமான புத்தகத்தை மாறாட்டஞ் செய்ததினால்
அறிந்தந்த வேதாவும் அவர்கள் தமையழைத்துச்
செறிந்த இருஷிகளைச் சிலைக்கல்லாய்ச் சாபமிட்டார்
அப்பொழு திவ்விருஷி அயனைத்துதித் திச்சாபம்
எப்பொழு திச்சாபம் ஏகுமென்றார் மாயவரே
வேதா தெளிந்து விஷ்ணுஸ்ரீ ரங்கம்விட்டுத்
தீதோர் திருவனந்தம் செல்லவரும் வேளையிலே
வந்து சிலைதனையும் மாயவனார் தொட்டிடுவார்
சிந்து திருக்கைதான் சிலைமேலே பட்டவுடன்
தீருமுங்கள் சாபமென்று சிவயிருஷி யானோர்க்குப்
பேருல கம்படைத்த பிரமன் விடைகொடுத்தார்
அந்தப் பொழுதில் ஐம்பத்தொரு நான்குரிசி
இந்தக் கற்சிலையாய் இவரிருந் தாரெனவே
மாமுனிவன் சொல்ல மாயவரும் நல்லதென்று
தாமுனிந்து கற்சிலையைத் தான்தொட்டா ரம்மானை
உடனே இருஷிகளாய் உருவெடுத்து மாலடியைத்
தடமேலே வீழ்ந்து தானாவி யேகுவித்து
அன்று பிரமா அடியார்க்கு இட்டசாபம்
இன்றகல வைத்து இரட்சிக்க வந்தவரே
எங்களுக்கு நல்லகதி ஈந்துதா ருமெனவே
திங்கள்முக மாயருட திருப்பாதம் போற்றிநின்றார்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi