கலியுகக் கடவுள்

கலியுகக் கடவுள்
பதினெண் சித்தர்களில் ஒருவரான கோரக்கர் என்னும் சித்தர் தமது சந்திர ரேகை என்னும் நூலில் பூமியில் கலியுகம் பிறந்த பின்னர் பாரத நாட்டை யார் யார் எல்லாம் ஆள்வார்கள், எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்வார்கள் என்கிற விவரங்களைத் தெளிவாக கூறியிருக்கிறார். அந்த பாடல் வரிகள் பின்வருமாறு.

194. அழிந்திந்தக் கலியுதிப்புப் பிரமாதி யாண்டு
ஆனசித் திரைவெள்ளி நவமி மூலம்
பழியில்லாப் பரிட்சித்தைஞ் நூறே யாண்டான்
பரிவாகச் சனமேசயன் முந்நூ றாண்டான்
இழிவில்லா நரேந்திரனா மென்ற மன்னன்
இரண்டுநூற் றெண்பத் தெட்டாக வாண்டான்
செழிப்பாகச் சாரங்க னெண்பத் தைந்து
செகமுழுவதும் விக்கிர மாதித்த வேந்தன்

195. வேந்தனவன் இரண்டாயிரம் ஆண்ட தப்பால்
வினயமுற்றுச் சாலிவா கனனுந் தோன்றிப்
பாந்தமிகு முந்நூற்று நாற்பத் தொன்ப
தாண்டகிலம் அரசுரிய செங்கோ லோச்சி
எந்துகங்குல் நற்போசன் ஐந்நூ றாண்டான்
சுப்புராய லறுநூற்றுத் தொண்ணூற் றைந்து
போந்தவே கர்த்தாக்க ளெண்பத் தைந்து
பிறையிசுலாம் அறுபத்தி ரண் டாண்டு"

196. ஒருமையிலா தாழிக்கரைக் கப்பா லுற்றோன்
ஓதுமந்தப் பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
பெருமையுடன் எழுபத்து மூன்ற தாண்டு
பேதமற ஆண்டிடவே இவன்சார் புற்றோன்
கருமையில்லா வெள்ளை நிறமாகத் தானே
கபடுற்றுக் கவர்ந்து தொண்ணுற் றாறதாண்டு
வறுமைசெய் தாண்ட பின்னிது குலத்தான்
வந்திடுவன் விசயனென்றா ரரசன் தோற்றி

197. தோன்றியீ றுறவுநான்கை வருட மாகுந்
துறைதவறா முறைபிசகா திருந்து ஓங்கும்
மேன்மை யுற இதுகடந்து நாள் துய்ய
மேதினியிற் பதினெண் பேர் கூட்டத்துற்ற
ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக் காரர்
அகிலசக்கரப் பார்வேந்தாய் அழியா தென்றும்
பான்மையுடன் அரசாள நான் மட்டல்ல
பகரவில்லை சிவனேந்திர மாமுனியும் சொன்னார்
                                                                                      - சந்திர ரேகை -

இந்த பாடல்களின் படி பாரத தேசத்தை ஆட்சி செய்தவர்களின் பெயரையும், ஆண்டுகளையும் பட்டியலிட்டால்......

பரீட்சித்து மன்னன்                                     - 500 ஆண்டுகள்
சனமேசெயன்                                                - 300 ஆண்டுகள்
நரேந்திரன்                                                       - 288 ஆண்டுகள்
சாரங்கன்                                                          - 85 ஆண்டுகள்
விக்கிரமாதித்தன்                                          - 2000 ஆண்டுகள்
சாலிவாகனன்                                                - 349 ஆண்டுகள்
போசனராசன்                                                 - 500 ஆண்டுகள்
சுப்பராயலு                                                       - 695 ஆண்டுகள்
கர்த்தாக்கள்                                                     - 85 ஆண்டுகள்
இஸ்லாமியர்                                                  - 62 ஆண்டுகள்
பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்          - 73 ஆண்டுகள்
பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்          - 96 ஆண்டுகள்
பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்          - 40 ஆண்டுகள்

இதன் பின்னர் கிள்ளுநாமக் காரர் கலி முடியும்வரை ஆட்சி செய்வார் என்கிறார்.

இந்த பட்டியலில்,

ஒருமையில்லா ஆழிக்கரைக்கு அப்பாலுற்றோன்
ஓதுஅந்தப் பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன் - 73 ஆண்டுகள்
இவன் சார்புற்றோன்கருமையில்ல வெள்ளை
நிறமாகத்தானே கபடுற்று கவர்ந்து வறுமைசெய்து ஆண்டபின் - 96 ஆண்டுகள்
வறுமைசெய்து ஆண்டபின் இது குலத்தான்
வந்திடுவன் விஜயன் போன்றோர் அரசன் - 40 ஆண்டுகள்

இவ்வாறு குறிக்கப்படும் ஆட்சிக்காலம் ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலமாகக் கொள்ளலாம், மொத்தமாக 209 ஆண்டுகள் என்று கோரக்கர் சித்தர் குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை எறத்தாழ 200 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டமை எல்லோருக்கும் தெரிந்ததே.

கடைசியாக ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர் "ஆன்ம நலம் அறிந்த கிள்ளு நாமக்காரர் அகிலசக்கர பார்வேந்தாய் அழியாமல் பான்மையுடன் அரசாள" என்று குறிப்பிட்டுள்ளார். இங்கே "ஆன்மநலம் அறிந்த கிள்ளு நாமக்காரர்" என்பது இந்தியாவின் தெச்சணமாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பில் தோன்றி துன்பம் என்று தன்னிடம் வருபவர்களை தனது கையால் தொட்டு அவர்களின் நெற்றியில் திருநாமம் இட்டு அவர்களின் துன்பங்களைப் போக்கும் அய்யா வைகுண்டர் பார்வேந்தாய் கலியுகம் முடியும் வரை பூமியை பான்மையுடன் அரசாள்வார் என்றுக் கூறுகிறார்.

மேலும் இந்தச் எதிர்வு கூறல்களை தான் மட்டுமல்லாது சிவனேந்திர மாமுனியும் கூறியுள்ளார் என்று கோரக்கர் சித்தர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஆக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் இந்திய நாட்டை யார் யார் எல்லாம் ஆள்வார்கள் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்வார்கள் என்று எதிர்வு கூறியிருப்பது ஆச்சர்யமான செய்தி!

அய்யாவழி, அய்யா, வைகுண்டர், அகிலத்திரட்டு, அருள் நூல், ayyavazhi, akilathirattu, arul nool, ayya vaikundar