அருள் நூல்

அருள் நூல்

அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள் நூல் அய்யாவழியின் புனித  நூல்கள் ஆகும். இவற்றுள் அகிலத்திரட்டு அம்மானை முதன்மை புனித நூலாகவும்,  அருள் நூல் இரண்டாம் நிலை புனித நூலாகவும் கருதப்படுகிறது. அய்யாவழி  புராணத்தின் அடிப்படையில், உலகம் உண்டானது முதல் தற்போது நடப்பவைகளும், இனி  நடக்கப்போவதுமான முக்கால சம்பவங்களை, நாராயணர் லட்சுமி தேவியிடம் கூறுவதை  அய்யாவின் சீடர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் கேட்டு, இங்கே அவைகளுக்கு  எழுத்து வடிவம் கொடுப்பதாக அகிலத்திரட்டு அமைந்திருக்கிறது.

இது கலியை அழிக்க இறைவன் உலகில் எடுத்த அவதாரத்தை மையப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆனால் அருள் நூலின் வரலாறு தெளிவு இல்லை. ஆனால் இது அய்யாவின்  சீடர்களாலும், அருளாளர்களாலும் எழுதப்பட்டவைகளாக நம்பப்படுகிறது. இன்னூலில் அய்யாவழி வழிபாட்டு - வணக்க முறைகள், சடங்கு முறைகள், அருளாளர்கள் மற்றும் சீடர்களின் தீர்க்க தரிசனங்கள், அய்யாவழி சட்டங்கள் ஆகியன அடங்கும்.

அய்யாவழியின் வாழ்வியல் மற்றும் இறையில் சட்டங்கள் அகிலம் முழுவதுமாக பரவலாக கணப்படுகிறது. இது இறைவனால் துறவிகளிடமோ, தேவர்களிடமோ, கீழ்நிலை கடவுளர்களிடமோ அவர்களின் கேள்விகளுக்கேற்றவாறு கூறப்படுவதாக  புராணத்தொகுதியின் கூடே பின்னப்பட்டு இடையிடையே நூல் முழுவதும் சிதறுண்டு  காணப்படுகிறது.

அருள்  நூல் இவ்வகையில் ஒரு தொகுப்பு நூலாக கருதப்படுகிறது. முதன்மை புனித நூலான அகிலம் கூறும் கோட்பாடுகள் இந்நூலில் விரிவாக விளக்கப் பட்டிருக்கின்றன. அருளாளர்களின் தீர்க்கதரிசனங்கள், அழிவு விபரங்கள், சமய - சமுக சட்டங்கள்  ஆகியனவற்றை இந்நூல் உள்ளடக்குகிறது.

அய்யாவழி, அய்யா, வைகுண்டர், அகிலத்திரட்டு, அருள் நூல், ayyavazhi, akilathirattu, arul nool, ayya vaikundar