அகிலத்திரட்டு அம்மானை 12001 - 12030 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 12001 - 12030 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இப்படியே சொல்லி இருக்குமந்த நாளையிலே
முப்படித்தான் ஈசர் மொழிந்தநா ளதுவரைக்கும்
இருப்போ மெனச்சொல்லி இருந்தார்கா ணம்மானை
அருப்பான நீசன் அவன்சிலநாள் சென்றதற்பின்
என்ன விசாரம் இப்பேய னுக்குகெனவே
தன்னே யிருந்து தானினைக்கும் வேளையிலே
முன்னே யொருயுகத்தில் மூவரிய நாரணர்க்கு
அன்னமொடு பாலும் அருந்த மிகக்கொடுத்த
ஆயர் குடியில் அவதரித்தக் கோமானில்
தூய வொருகோனும் துணிந்தங் கெழுந்திருந்து
பத்தியுள்ள நாரணரைப் பாரா வதுஇளக்க
உத்தரித்துக் கோனும் உலகமதை யாளுகின்ற
மன்னவன் முன்பில்வந்து நின்றங்கு ஏதுரைப்பான்
தன்னதிய மானத் தலைவனே கேட்டருளும்
நம்முடைய ராச்சியத்தில் ஞங்ஙளிட தன்னினத்தில்
எம்முடைய ஆளாய் இருக்கின்ற இச்சாணான்
சாணானில் நல்ல தன்மைவெகு மானமுள்ளோன்
கோணா மனதுடையோன் குணமுடைய நல்லவன்காண்
நேர்மை யொழுங்கோன் நேர்சொல் லொருவாக்கன்
ஓர்மை யுடையோன் உபகாரக் காரனிவன்
ஆனதா லெங்களுக்காய் அரசேநீர் தாமுருகி
ஈனமிலா தெமக்காய் இரங்கு மெனத்தொழுதான்

வைகுண்டர் விடுதலை


அப்போ தரசன் அவன்மனது தானிளகி
இப்போ திவனை யாமனுப்பி விட்டிடுவோம்
விட்டா லவனும் மேலு மிருக்குமுறை
கட்டாகச் சொல்லிக் கைச்சீட் டெழுதிவைத்துப்
போகச்சொல் லென்று போகண்ட னார்க்குரைக்க
ஆகம் மகிழ்ந்து ஆயன்மறுத் தேதுசொல்வான்
என்ன விதமாய் எழுதிவைக்கும் வாசகங்கள்
மன்னவனே சொல்லுமென மாறி யவன்தொழுதான்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi